Showing posts with label Limitation of court jugement. Show all posts
Showing posts with label Limitation of court jugement. Show all posts

Thursday, November 30, 2017

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?


வெங்கடாசலம் என்பவர் ரூ. 32,600-ஐ வசூல் செய்வதற்காக வீராசாமி என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு வெங்கடாசலம், வீராசாமியை கைது செய்து பணத்தை வசூல் செய்து தரும்படி கேட்டு ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு வீராசாமி பதிலுரை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்தை பற்றுகை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சிறையில் அடைப்பதற்கு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்திருப்பது தவறு என்று கூறி நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வீராசாமி 14.8.2009 ஆம் தேதிக்குள் தீர்ப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவை எதிர்த்து வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதியரசர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் " A. K. சுப்பிரமணிய செட்டியார் Vs A. பொன்னுச்சாமி செட்டியார் (1959-AIR-MD-777)" என்ற வழக்கில், தீரப்பினை பெற்றவர், தீர்ப்புக் கடனாளியிடமிருந்து தீர்ப்புத் தொகையை வசூல் செய்வதற்கு தீர்ப்புக் கடனாளியின் சொத்தை பற்றுகை செய்வதன் மூலம் அல்லது அவரை கைது செய்து உரிமையியல் சிறையில் அடைப்பதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம். தீர்ப்பினை பெற்றவர் இந்த இரண்டு நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "ஜெகதீஸ்வரன் Vs பெடரல் பேங்க், பொள்ளாச்சி கிளை, கோயம்புத்தூர் (1994-1-MLJ-297)" என்ற வழக்கில், 1ஆம் எதிர்மனுதாரரின் சொத்தின் மீது அல்லது அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுவதென்பது தீர்ப்பை பெற்றவரின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அவ்வாறு தேர்வு செய்வதை சட்டம் அனுமதிப்பதாக தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "கணேஷ் Vs சந்திரன் (2006-3-CTC-546)" என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் " ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா Vs நெசஸ் இன்டெக்ஸ் போர்ட் (AIR-1992-SC-1740)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பினை பின்பற்றி, தீரப்பினை பெற்றவர் அந்த தீரப்பினை நிறைவேற்றுவதற்கு அவர் எந்தவொரு முறையிலும் நடவடிக்கை எடுக்கலாம். அவர் இந்த முறையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

எனவே பணத்தை வசூலிக்க தீர்ப்பை பெற்றவர் முதலாவதாக தீர்ப்பு கடனாளியை சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் என்று மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் சொத்தைதான் பற்றுகை செய்ய முதலாவதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறி தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 1508/2010, DT - 18.12.2013

T. Veerasamy Vs Venkatachalam

2014-1-TLNJ-CIVIL-485

ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு சொத்தை நீதிமன்றத்தின் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட பிறகு அந்த ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?


உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92 மற்றும் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆகியவற்றின் படி ஒரு சொத்து நீதிமன்ற ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அந்த தீர்ப்புத் தொகையை, தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு வைப்பீடு செய்ய தவறினால் தீர்ப்பு கடனாளி ஏல விற்பனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம் " ராம் கரண் குப்தா Vs J. S. எக்ஸிம் லிமிடெட் (2012-6-CTC-SC-710)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92, காலவரையறைச் சட்டம் பிரிவு 127 "ஆகியவற்றை பார்க்கும் பொழுது உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் மனுதாக்கல் செய்வதற்கோ, தேவையான தொகையை வைப்பீடு செய்வதற்கோ எந்த கால அளவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆனது 60 நாட்களுக்குள் அந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனவே சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் தீர்ப்புக் கடனாளி விற்பனைத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய தவறி விட்டால், உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் தீர்ப்பு கடனாளியால் ஏல விற்பனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்திரவிடுவதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. A. NO - 4469/2014, DT - 11.4.2014

அன்னபூர்ணா Vs மல்லிகா அர்ஜுன் மற்றும் பலர்

2014-2-TLNJ-CIVIL-110