Showing posts with label Registration Department. Show all posts
Showing posts with label Registration Department. Show all posts

Friday, February 9, 2018

பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழையா?

பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள்.வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும். பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.

எனவே பத்திரப்பதிவுக்காக ஆவணங்களைத் தயார் செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் எண்ணெண்யை விட்டுப் படிக்க வேண்டும். சிறியதாக ஒரு தவறும் இல்லையென்றால் மட்டுமே சரியான ஆவணமாக இருக்கும். ஒரு வேளை பதிவு செய்த பிறகு ஆவணங்களில் தவறு இருந்தால் என்ன செய்வது? அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும்.

பிழை திருத்தும் ஆவணம் மூலமே பிழைகளைச் சரி செய்ய முடியும். அப்படிப் பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், விலாசம் போன்றவற்றில் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்.

சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்த ரூ. 300 வரை செலவாகக்கூடும்.

எல்லாம் சரி, மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டால் பிழையைத் திருத்த முடியுமா? இந்தப் பிழை சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்தால் அலைய நேரிடும். இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்.

அந்தப் பிழையைத் திருத்தும்பட்சத்தில் வித்தியாசத் தொகைக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த சொல்லக்கூடும். கூடுதல் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.   

Saturday, December 30, 2017

Power of Attorney - பவர் ஆவணம் 2 வகைப்படும்.

1) பொது அதிகார ஆவணம் (General Power of Attorney)
==============================================
உங்கள் சொத்து இருக்கிறது. அந்த சொத்து சம்பந்தமாக எல்லாவற்றுக்குமான அதிகாரங்கள் கொடுத்தால் அது பொது அதிகார பத்திரம் ஆகும். அதாவது சொத்தை விற்க, வாங்க, பாதுகாக்க, கோர்ட்டுக்கு போக, வரி செலுத்த, பயன்படுத்த, வாடகைக்கு விட, பணம் வசூலிக்க என அந்த சொத்துக்கு முழுவதுமான அதிகாரம் வழங்கல் ஆகும். சுருக்கமாக "எல்லாவற்றையும் நீயே செய்து கொள், உன்னை நான் நம்புகிறேன் " என பத்திரத்தில் எழுதி பதிவு செய்து விட்டால் அது பொது அதிகார ஆவணம் ஆகும்.

2)சிறப்பு அதிகார பத்திரம் (Special Power of Attorney)
==============================================
இந்த பத்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் அதிகாரம் வழங்கப்படும். அதாவது சொத்தை விற்க மட்டும் அல்லது மனைகளாக பிரிக்க மட்டும் அல்லது பாதுகாக்க மட்டும் என குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் பவர் தருவது சிறப்பு அதிகார பத்திரம் ஆகும்.

அடுத்ததாக உரிமையாளருக்கு தெரியாமல் சொத்தை விற்க முடியுமா?
---------------------------------------------------------------------
பவர் கொடுக்கப்பட்டவுடன் பவர் வாங்கியவர் சொத்தை பொறுத்து செயலுரிமையாளர் ஆகி விடுகிறார். அதனால் சொத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை உண்டு. பவர் பெற்றவர் சொத்தை விற்று அது சம்மந்தப்பட்ட கணக்கை உரிமையாளர்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். இது குறித்த ஷரத்துகள் இந்திய ஒப்பந்த சட்டத்தில் உள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 213ன் படி உரிமையாளர் கேட்கும் போது பவர் ஆப் அட்டார்னி கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 214 ன்படி சொத்து பற்றிய இக்கட்டான நிலையில் உரிமையாளரிடம் கருத்துக்களை பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது பவர் ஆப் அட்டார்னியின் கடமையாகும்.

பிரிவு 215ன் படி பவர் ஆப் அட்டார்னி முதல்வருக்கு தெரிவிக்காமல் தனக்காக தன் உறவினர்கள் பெயரில் சொத்தை வாங்குவது சட்ட விரோதமாகும். அவ்வாறான சூழ்நிலையில் உரிமையாளர் அந்த கிரையத்தை செல்லாது என அறிவிக்க கேட்டு நீதிமன்றத்தை நாடலாம்.

பிரிவு 216ன் படி உரிமையாளருக்கு தெரியாமல் பவர் ஆப் அட்டார்னி தன்னுடைய முதல்வருக்கு பதிலாக தானே உரிமையாளர் என்ற பெயரில் சொத்தில் தொழில் ஏதாவது செய்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தையும் உரிமையாளர் பெற தகுதியுடையவர் ஆவார்.

பிரிவு 217ன் படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய செலவழித்த பணம், ஊதியம் ஆகியவற்றுக்காக சொத்திலிருந்து கிடைக்கும் பணத்தை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

பிரிவு 218 ன்படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு சேர வேண்டிய பணத்தை கழித்து கொண்டு பாக்கி தொகை அனைத்தையும் உரிமையாளரிடம் செலுத்த கடமை பட்டவராவார்.

பிரிவு 220 ன்படி அதிகார பத்திரத்திற்கு மாறாக முறைகேடாக நடத்தும் தொழிலுக்கு ஊதியம் பெற பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை இல்லை.


புராமிசரி நோட் அல்லது புரோ நோட்

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு இந்த புரோ-நோட்டைத் தான் எழுதிக் கொடுக்க வேண்டும். Promise செய்து எழுதிக் கொடுத்த நோட்டை Promissory Note என்று சொல்வர்.

பழைய காலத்தில், "IOU" (or) 'I owe you'  அல்லது "நான்  உனக்கு கடன் பட்டிருக்கிறேன்" என்று சுருக்கமாக எழுதிக் கொடுப்பார்களாம். இன்றும் கிட்டத்தட்ட அதே நடைமுறைதான்  பின்பற்றப்படுகிறது.

அதாவது, "On Demand, I (name) promise to pay Mr. (name) Rs…  with interest" என்று எழுதப்பட்டிருக்கும். இது அச்சிடப்பட்ட காகிதமாக கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருரூபாய்க்கு  ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துச் செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொள்வார்கள். அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்ள உதவுவதால், இதை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வெள்ளை பேப்பரில் எழுதி அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் மட்டுமே ஒட்டிக் கொண்டால் போதும் என்ற சட்டம் உள்ளது. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதக் கூடாது. ஆனாலும், பலர் இதை ஸ்டாம்பு பேப்பரில் எழுதினால், நல்லது என்றும், மதிப்பு அதிகம் இருக்கும் என்றும் நினைத்து எழுதுகிறார்கள். இது தவறு.

இந்த புராமிசரி நோட்டில் மேற்சொன்ன உறுதிமொழியைத் தவிர வேறு வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அப்போதும் இந்த புராமிசரி நோட்டு சட்டப்படி செல்லாததாகிவிடும். வேறுசிலர், 'இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், சொத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் 'என்றும் மிரட்டல்போல எழுதி வாங்கிக் கொள்வார்கள். அப்படி எழுதி இருந்தாலும் அது செல்லாது.

புரோநோட் கடனில், பணத்தை வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்மீது சிவில் கோர்ட்டில் மட்டுமே வழக்குப் போடமுடியும். காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க முடியாது. ஆனாலும் சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் சுலபமாக வசூல் செய்துவிடலாம் என்று கருதி புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை போலீஸ் விசாரிக்கவே அதிகாரம் கிடையாது.

இந்த புராமிசரி நோட்டில் உள்ள முதல் வாசகம் "On Demand" என்று இருக்கும். அதற்கு 'கேட்கும்போது' திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். எனவே அந்த புராமிசரி நோட்டில் 3 மாதத்தில் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றெல்லாம் எழுதக் கூடாது. ஆண்டிமாண்ட் என்ற வார்த்தையே போதுமானது.

ஒரு புராமிசரி நோட்டுக்கு அதிலுள்ள தேதியிலிருந்து மூன்று வருடத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும். அதற்குப்பின் அதுவே காலாவதி ஆகிவிடும். காலாவதியான புராமிசரி நோட்டை ஒன்றும் செய்ய முடியாது. அதைக் கொண்டு பணம் வசூல் செய்யவும் முடியாது. அதற்கு உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், பணம் வாங்கியவரே அதில் மறுபடியும் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும்.

புராமிசரி நோட்டில் ஒருரூபாய்க்கான ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினாலே போதும். அதில் எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். பணத்துக்கு ஏற்ப ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பணத்துக்கும் ஒரே ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புதான்.

புராமிசரி நோட்டுக்கு சாட்சி யாரும் தேவையில்லை. இருந்த போதிலும், அதில் சாட்சியும் வாங்கிக் கொள்கின்றனர். தவறில்லை. சாட்சிகள் அவசியம் இல்லை என அந்த சட்டம் கூறுகிறது.

திருப்பிக் கொடுக்கும் சக்தி இருப்பவருக்கு மட்டும் கடன் கொடுத்தால் திருப்பி வசூல் செய்து கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவருக்குக் கொடுத்தால், எந்த கோர்ட்டுக்குப் போனாலும் வசூல் செய்ய முடியாது. பணம் இருப்பவரிடம்தான் கோர்ட்டும் வசூலித்துக் கொடுக்கும். சொத்தோ, பணமோ இல்லாதவரிடம் எதை வசூலிப்பது? எனவே கடன் கொடுப்பவர்களும் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

உயில் புரபேட் (Will Probate) செய்வது எப்படி ?

==========================================

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;

இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்; முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;

இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்;
உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்; இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது); அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”; இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”;

கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச்  சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும்; குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்;

முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால்,  அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்; இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்; சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்;
இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித  நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;

இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்;

ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்; ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;

உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு  ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்; ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை;

உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது; கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன; கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம்; அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள்; அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்;

இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர்; அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள்; இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்;

கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர்: இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது; மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்;

உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர்: உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார்; அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்; சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார்; அவரே அந்த உயிலுக்கு அதிகாரி; இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது;

ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர்; பொதுவாக இது போதும்; ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார்; அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது: ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர்; கூட்டாகவும் செய்வர், தனித்தனியாகவும் செய்வர்; அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவே!

எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது; அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை; எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில்; மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவே; கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும்; எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்;

உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும்; உயிலை கையாலும் எழுதி வைக்கலாம்; தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம்; எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும்; அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம்; அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை; அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது; பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும்; யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது; அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது;

ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும்; கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும்; ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர்; அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்;

இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்; ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்; இதை சட்டம் கட்டாயப் படுத்திகிறது; இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது; இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது;

எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும்; வேறு யாருக்கும் தெரியாது, அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது; எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;

அப்படிப்பட்ட சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? நியாயமானவராக இருக்க வேண்டும்; குழப்பவாதியாக இருக்க கூடாது: எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது; என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும்; அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!

மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்; சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது; வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது;

மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது; உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே இருக்க வேண்டும்; (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!); முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது;

மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது; அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும்; எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்;

மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும்; உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார்; அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார்; முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார்; அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும்; அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும்; அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார்; சாக்குப்போக்கு சொல்வார்; தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும்; எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவது எப்படி?

அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

பதில்:
------
’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.

தனியார் டிரஸ்ட்:
------------------
டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொது டிரஸ்ட்:
----------------
பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

1). சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக்கூடாது.

2). பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும்கூட இருக்கக்கூடாது.

3). ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.

4). எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில்

a) நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும்.
b) பொருளாளர் ஒருவர் இருப்பார்.
c) மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள்.
d) டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

5). டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

6). ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.
--------------------
இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

Saturday, December 16, 2017

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்
Compulsory Registrable Documents

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்து, இந்திய அரசு ஏற்றுக் கொண்ட ஒரு சட்டம்; இதில் இந்தியஎன்ற வார்த்தையை 1969ல் இருந்து நீக்கி விட்டார்கள்; (இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் எல்லாமே இந்தியச் சட்டங்கள்தானே!); இந்த பதிவுச் சட்டத்தில்தான், பத்திரங்களை பதிவு செய்யவதைப் பற்றிய சட்ட விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன;
இந்த பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1)ன்படி சில பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; அவ்வாறு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்என்று சொல்லி உள்ள பத்திரங்களை, பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அவைகள் சட்டப்படி செல்லாது; அந்த பத்திரங்களைக் கொண்டு உரிமை கோர முடியாது; கோர்ட்டில் அந்த பத்திரங்களை ஒரு சாட்சியமாக (Documentary evidence) எடுத்துக் கொள்ள முடியாது;
பொதுவாக அசையாச் சொத்துக்களை (Immovable properties) பதிவு செய்து கொள்ள வேண்டும்; ஆனால் அதிலும் குறிப்பாக சில பத்திரங்களை கட்டாயப் பதிவில் சேர்த்துள்ளார்கள்;
கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பத்திரங்களின் விபரம்;
(1)     அசையாச் சொத்தின் தானப் பத்திரம்” (Gift deed) எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(2)     அசையாச் சொத்தில் உள்ள சொத்துரிமையை மாற்றிக் கொடுத்தாலும், விற்பனை செய்தாலும், விட்டுக் கொடுத்தாலும், விடுதலை செய்தாலும், அந்தப் பத்திரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் உரிமை அன்றே இருந்தாலும், பின்ஒருநாளில், அதாவது இனிமேல் தருகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(3)     அசையாச் சொத்தில் உள்ள உரிமையை விட்டுக்கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டால், அந்தப் பத்திரங்களை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(4)     வருடக் குத்தகைப் பத்திரங்கள் (Yearly Leases) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; வருடக் குத்தகை என்பது ஒரு வருடம் அல்லது அதற்குமேல் உள்ள காலத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது; (நகரங்களில் உள்ள வீட்டு வாடகைகள், பொதுவாக மாத வாடகையாக 11 மாதங்களுக்கே செய்து கொள்ளப்படும்; எனவே வீட்டு வாடகை பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது;)
(5)     அசையாச் சொத்துக்களைப் பொறுத்துப் பெறப்பட்ட கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள், அவார்டுகள் இவைகளை அல்லது அந்த டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைன்மெண்ட் பத்திரங்களை (Assignment of Decree, Order or Award) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(6)     அடுக்குமாடிக் கட்டிடங்களை தனி ப்ளாட்டுகளாக கட்டிக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை (Agreement relating to construction of multiunit house building on land) கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்:

மேற்சொன்னவை அல்லாமல் மற்ற பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை;
 அதைப்பற்றிய விபரம் கீழே;
(1)     சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் பத்திரங்கள்;
(2)     கம்பெனிகளின் ஷேர்களின் பத்திரங்கள் (Shares relating to Joint Stock Company);
(3)     கம்பெனிகள் கொடுக்கும் டிபன்சர் பத்திரங்கள் (Debenture issued by company);
(4)     கம்பெனி டிபசன்பர் பத்திரங்களை மாற்றிக் கொடுக்கும் பத்திரங்கள்;
(5)     அசையாச் சொத்தின் எந்த உரிமையையும் மாற்றிக் கொடுக்காத பத்திரங்கள்:
(6)     கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள்; any Decree or Order of a Court; இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத அசையாச் சொத்தைப் பொறுத்த அந்த கோர்ட் ஒரு டிகிரி கொடுத்திருந்தால், அதை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது, வழக்கில் அந்த அசையாச் சொத்து சம்மந்தப்பட்டிருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வழக்குக்கு சம்மந்தமில்லாத வேறு ஒரு அசையாச் சொத்தைப் பொறுத்து, பார்ட்டிகளுக்குள் சமாதான டிகிரியை கோர்ட் மூலம் பெற்றிருந்தால், அந்த கோர்ட் டிகிரியை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்);
(7)     அரசாங்கம் எழுதிக் கொடுக்கும் அசையாச் சொத்துக்களின் கிராண்ட் பத்திரங்களை (Government Grant) பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (அரசாங்கம் விற்கும் அல்லது இலவசமாக கொடுக்கும் அசையாச் சொத்தின் பத்திரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
(8)      நில மேம்பாட்டுச் சட்டம் 1871ன்படி கொடுக்கும் கொலேட்டிரல் செக்யூரிட்டி கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(9)     விவசாய கடன் சட்டம் 1884ன்படி கொடுக்கும் கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(10)  அறக்கட்டளை சட்டம் 1890ன்படி அதில் உள்ள ஒரு டிரஸ்டி, அந்த டிரஸ்ட்டின் சொத்தை வேறு ஒரு டிரஸ்டிக்கு பொறுப்பு ஒப்படைக்கும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை;
(11)  ஒரு அடமானப் பத்திரத்தில் பெற்ற அடமானக் கடனை, திருப்பி கொடுக்கும் ரசீது பத்திரத்தை, பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும் அதை பதிவு செய்து கொண்டால், சொத்தின் வில்லங்க சான்றிதழிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்);
(12)  கோர்ட் ஏலம் மூலம் விற்பனை செய்து, ஏலம் எடுத்தவருக்கு வழக்கும் கிரய சர்டிபிகேட் (Sale Certificate) என்னும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும், வழக்கில் உள்ள பார்ட்டிகள் அந்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு மனுச் செய்து அதன் மூலம் கோர்ட் ஏலம் கொண்டுவந்து விற்பனை செய்தால், அந்த விற்பனை பத்திரத்தை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஏனென்றால், அது கோர்ட்டே விற்பனை செய்த பத்திரம் அல்ல);


Friday, December 15, 2017

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை  உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டு உள்ளது (G.O Ms.No 360, Health and Family Welfare Department,  Dt: 12.10.2017).

பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.

1, பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் ரூ.2 தாமதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.100 ஆக  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2, அதேபோல 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வசூலிக்கப்பட்டு வந்த தாமதக்கட்டணம் ரூ.5,  தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

3, ஓராண்டுக்கு மேல் ஆகும் தாமத பதிவுகளுக்கு  ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் ரூ.500 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

5, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால்,  ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

6, ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

7, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்  வழங்க, கட்டணம் ரூ.5 என்பது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

8, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் கூடுதல் நகல் பெற  கட்டணம் ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

9, பிறப்பு மற்றும் இறப்பு பதியப்படவில்லை (Form 10 - NAC) என்ற சான்றிதழ் பெற இதுவரை ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 29, 2017

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

ஒரு சொத்து குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

அவ்வாறு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை பெற்றவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய முடியுமா?

ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் உ. வி. மு. ச கட்டளை 21,விதி 97 ன் கீழ் அல்லது கட்டளை 21,விதி 98 மற்றும் 102 ன் கீழ் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது.

உ. வி. மு. ச கட்டளை 21 விதி 102 ஆனது உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உரிமை மாற்றம் பெற்றவர் இந்த பிரிவின் கீழ் எந்த பரிகாரமும் கோர முடியாது என்று கூறுகிறது.

N. S. S. நாராயண சர்மா மற்றும் பலர் Vs M/s கோல்டு ஸ்டோன் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட் (2001-4-CTC-755) மற்றும் பானுமதி (எ) கருணையம்மாள் Vs A. P. அர்த்தநாரி மற்றும் பலர் (2002-5-CTC-483) மற்றும் உச்சநீதிமன்றம் "உஷா சிம்கா Vs டைனாராம் (2008-7-SCC-144)" ஆகிய வழக்குகளில், ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதில் தீரப்பாணையும் வழங்கப்பட்டிருந்தால், அந்த வழக்கு சொத்து குறித்து ஏதேனும் உரிமை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை அந்த சொத்தை வாங்கியவர்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு தடையை உ. வி. மு. ச கட்டளை 21,விதி 102 ஏற்படுத்தும் என்று தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கினால் அது அந்த தீர்ப்பை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் ஏதும் செய்ய முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. M  S. A. (MD). No - 12/2014

Dt - 27.1.2015

செல்லத்துரை மற்றுமொருவர் Vs ஆவுடையப்ப கோனார் மற்றும் பலர்

2015-1-TLNJ-970

பத்திரம் பதிவு செய்யும் வழிமுறைகள் கவனிக்க வேண்டியவை என்ன ?

                        

 பத்திரம் பதிவு செய்யும் வழிமுறை



நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால்முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம்பட்டாசிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.

பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன ?

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””


முத்திரைதாள்களில்கிரயப்பத்திரவிவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும்.

சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். அவர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைபடம், அடையாள அட்டை ஆகியவற்றையும் மற்ற விவரங்களையும் சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார்.

பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின் பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.

புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர்.

(தற்பொழுது நகரங்களில் பதிவு அலுவலகத்தில் கணினி முலம் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டு Cdயும் வழங்கப்படுகிறது) இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும் கையொப்பம் இட வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.

வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும்.நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.

பத்திரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவது?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்று பெயர். பத்திரப்பதிவின் போது இந்த மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.


சொத்து மதிப்பை நாம் நிர்ணயம் செய்யலாமா?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
47-ஏ பிரிவு என்றால் என்ன?
“”””””””””””””””””””””””””””””””””””””””””
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகம். என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கலாம்.


சார்பதிவாளர் இப்பத்திரத்தை பதிவு செய்து விட்டு (pending Document) பெண்டிங் டாக்குமென்ட்)) என முத்திரை இட்டுவிடுவார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார்.

அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். 

அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும் நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 ஏ பிரிவு என்று பெயர்.

குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்.

41 படிவம் பற்றி தெரியுமா?
“”””””””””””””””””””””’””””””””””””””””””
வழிகாட்டி மதிப்பின் 8 சதவீத அளவுக்கும் முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலை, அல்லது கிடைக்க வில்லை எனில் அதற்கும் வழி உண்டு.

குறிப்பிட்ட அளவுக்கு முத்திரைத்தாள் வாங்கி, மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவம் உள்ளது.


வாங்க வேண்டிய முத்திரைத்தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டியது ஆயிரம் ரூபாய் வரை எனில் பணமாகவே செலுத்தலாம்.

அதற்கு மேல் இருந்தால் வரைவேலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தவேண்டும்.

எந்த பெயரில் டி.டி எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த அலுவலக தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவுக்கட்டணமாகவும், ரூ. 100யை கணினி கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இதையும் ரூ. 1000 வரை பணமாகவும், அதற்கு மேல் எனில் காசோலையாகவும் அளிக்க வேண்டும்(தற்போழுது On line money transfer முறை நகர்ப்புறம் பின்பற்றப்படுகிறது)