Friday, February 9, 2018

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment