Monday, December 18, 2017

அடமானக் கடனை மீட்கவே முடியாதா?

ஒரு நபர் தன் நிலத்தை அவசர தேவையின் காரணமாக அடமானமாக வைத்து கடன் பெறுகிறார். பொதுவாகவே கடன் வாங்குவது என்பது வேகமாக ஓடுகின்ற நதியில் நீச்சல் தெரிந்த நபர் எதிர்நீச்சல் போடுவது போல ஆபத்தான பயணமாகும்.

அதேசமயத்தில் தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது நீச்சலே தெரியாத ஒரு நபர் ஓடுகின்ற காட்டாற்று வெள்ளத்தில் எதிர்த்து நீந்த முயற்சி செய்வது போன்ற மிகுந்த ஆபத்தான செயலாகும். அது வங்கியின் மூலம் வாங்கிய கடன் அல்லது தனியாரிடம் வாங்கிய கடன் எதுவாக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வட்டி குட்டிபோட்டு அடமானம் வைத்த சொத்தை இழந்திட நேரிடும்.

முறையாக அசலும் செலுத்திடாமல், வட்டியும் செலுத்திடாமல் அடமானச் சொத்து ஏலத்திற்கு வந்து வேறு ஒருவர் அதை வாங்கிய பிறகு பணத்தை மொத்தமாக திரட்டி அடமானக் கடனை திருப்பி செலுத்தி தன் சொத்தை திரும்ப பெற முயற்சி செய்வது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் ஆகிவிடுகிறது. இது சம்பந்தமான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் Allokam Peddabbaya என்ற நபர் தன்னுடைய அடமானச் சொத்தை ஏலத்திற்கு வந்த பிறகு மீட்கவே முடியாதா? என்ற தனது ஆதங்கத்தை மறுஆய்வு மனுவாக தாக்கல் செய்து விசாரணை நடத்தும்படி கேட்டிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், Transfer of the property Act (1882) பிரிவு 60 ன்படி கடன் பொருட்டு அடமானம் வைக்கப்பட்ட சொத்து முறையாக அசலும், வட்டியும் கட்டாததால் ஏலத்திற்கு வந்து விற்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு சுவாதீனமும் கொடுக்கப்பட்ட பிறகு கடன்காரர் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தினாலும் நிச்சயமாக அடமானச் சொத்தை திரும்ப மீட்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்கள்.

SC. No- 671/2017
Allokam Peddabbaya Vs Allahabad Bank dt -  19.6.2017

No comments:

Post a Comment