Tuesday, March 13, 2018

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை

அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?
அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும். பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும். குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும். எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.
இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.
எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.
அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும். அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.

சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.  அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும். உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது. அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.

உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.

அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும். இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்
.
இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.

பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம். முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.

இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது. அதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது” என்றார் அவர்.

ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறிவிட்டது. பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்

ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html.


ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்படி மீட்பது?

======================================
 தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

அப்படித ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
1. கிரிமினல் வழக்கு :
--------------------------------
நேரடியாக, போலிஸ் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வைக்கலாம். அப்போது, மோசடி செய்தவர், முன் ஜாமீன் அல்லது ஜாமீன் போடும்போது, போலிஸ் உதவியுடன், அவர் எந்த நீதிமன்றத்தில் மனு போட்டுல்லாரோ, அங்கு, ஒரு வழக்கறிஞர் வைத்து, intervene மனு செய்யலாம். அப்படி செய்யும்போது, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம். அப்போது, பிணை கிடைக்க, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் ஆணையிடும்போது, அங்கேயே அலைச்சல் இல்லாமல், பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது.

2. பத்திரத்துறையில், மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்ய மனு கொடுப்பது.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
============================================
இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

3. சிவில் வழக்கு :
--------------------------
இது போக, இரண்டாவது பத்திரம் பதிந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால், சிவில் வழக்கு போடலாம். நீதிமன்ற கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும். சம்பந்தம் இல்லாமல், நம் சொத்தை, வேறு நபர்கள் விற்கும்போது, மார்க்கெட் மதிப்புக்கு, நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. மோசடி கிரைய பத்திரம் செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கேட்கலாம்.


நில அளவுகள் அறிவோம்.


♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்....

SUPREME COURT- LEGAL AID FOR MIDDLE INCOME GROUP - நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித்திட்டம்.

  • திட்டச் செயல்பாடுகள்
நடுத்தர வருமானமுள்ளவர்களுக்குச், சட்ட உதவிகளைச் செய்யும் நோக்கத்துடன் நடுத்தர  வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் மொத்த வருமானம் ரூ.20.000/- அல்லது ஆண்டு வருமானம் 2,40,000/- க்கு மிகாமலும் இருக்கும் குடிமக்கள் நடுத்தர வருமானமுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்; தகுதியுடைய சிலருக்கு மாதவருமானம் ரூ.25,000/- அல்லது ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- இருப்பினும் அவர்களும் நடுத்தர வருமானமுடையவர்களாகவே கருதப்படுகின்றனர். சுய சார்புடைய இத்திட்டத்தின் ஆரம்ப முதலீடு முதல் நிர்வாகக் குழுவினரால் (First Executive Committee) தரப்படும்.

இத்திட்டத்தின் கீழ்வரும் வழக்குகள்
---------------------------------------------------------
•    உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட இருக்கும் வழக்குகள்.
•    உச்சநீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் பின்வரும் வழக்குகள் வராது.

a)    சுங்கச்சட்டம் 1962 (custom act 1962) பிரிவு 130A இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

b)    மத்திய மற்றும் தீர்வை மற்றும் உப்புச்சட்டம் 1944 (Central and Excise and Salt Act, 1944) பிரிவு 35  இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்

c)    தங்க (கட்டுபாடு) சட்டம் 1968, பிரிவு 82C இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்

d)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு ( M.R.T.P. Act) 1969 பிரிவு 7(2) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

e)    வருமான வரி சட்டம் 1961 (Income Tax Act, 1961) பிரிவு 25 J இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

f)    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 317 (1) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

g)    குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் சட்டம் 1952 பகுதி 3 இன் தேர்தல் குறித்த வழக்குகள்.

h)    பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த வழக்குகள்.

i)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு சட்டம் 1969 (M.R.T.P. Act, 1969) இன் கீழ் வரும் மேல் முறையீடு.

j)    சுங்கச் சட்டம் 1962 பிரிவு 130 E, உட்பிரிவு (b) இன் கீழ் வரும் மேல் முறையீடு.

k)    மத்திய தீர்வை மற்றும் உப்பு 1944 சட்டத்தின் பிரிவு 35 L இன் கீழ்வரும் மேல் முறையீடு.

l)    செய்திகளை மறு ஆய்வு செய்தல்

உதவிபெற அணுகும் சமயம் (When to approach for aid)
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுக்கவோ, எதிர்த்து வழக்காடவோ நேரிடும் சூழல்களில், மத்தியதர வருமான சமுதாயத்தை வழக்காடுபவர் அணுகலாம்; அச்சூழல்கள் பின்வருவனவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்;

a)    மேல் முறையீடு/சிறப்பு விடுமுறை மனுக்கள், உரிமையியல் அல்லது குற்றவியல், உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரான வழக்கு,

b)    நீதிப்பேராணை மனு (Writ Petition)/ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)

c)    உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு ஒரு மாநிலத்தில் தேங்கி இருக்குமானால் அதனை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு மற்றும்

d)    உச்சநீதிமன்ற சட்டச்செயல்பாடுகள் குறித்த சட்ட ஆலோசனை.

செயல்படும் முறை (How it works)
==============================
•    உச்சநீதிமன்ற நடுத்தர வருமானத்தினரின் சமுதாயம், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரையும் உறுப்பினராகக் கொண்ட வழக்கறிஞர் குழுவினை (panel of Advocates) கொண்டுள்ளது. இக்குழுவினை உருவாக்கும்போது ஒரு வழக்கறிஞரை, ஆனால் இரண்டுக்கு மேற்படாத வழக்கு நடைபெறும் நீதிமன்ற மாநிலத்தின் வட்டாரமொழி தெரிந்த வழக்கறிஞரை உறுப்பினராகக் கொள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.

•    வழக்கறிஞர்கள் குழு, ஒரு வழக்கில் பங்குபெறும்போது இத்திட்டத்தின், சட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கிறது.

•    ஆணையத்திலுள்ள (Committee) 3 வழக்கறிஞர்கள், விருப்ப அடிப்படையில் குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர், வழக்குரைப்பவர் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அல்லது வழக்காடும் ஆலோசகர் (arguing counsel) அல்லது உயர் ஆலோசகர் (Senior Counsel)  இவர்களில் யாராவது மூவரைச் சுட்டிக்காட்டலாம். விண்ணப்பதாரரின் தேர்வினை குழு மதிக்க முயலும்.

•    பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர் மற்றும் உயர் ஆலோசகர் இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழக்கினை அளிக்க குழுவினருக்கு உரிமையுண்டு. விண்ணப்பதாரரின் மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர், உயர் ஆலோசகர் இவர்களின் யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை உச்சநீதிமன்ற (நடுத்தர வருமானக்குழு) சட்ட உதவி சமுதாயத்திடம் (Supreme Court (Middle Income Group) உள்ளது.

சட்ட உதவிக்காக அணுக வேண்டிய இடம். (Where to approach for legal aid)
==============================================
•    விருப்பமுள்ள வழக்குரைப்போர் உச்சநீதிமன்ற நடுத்தர வருமான குழுவினரின் சட்ட உதவி மையத்தின் செயலரை அணுகும் முன் மையத்தால் அளிக்கப்படும் ஒரு படிவத்தினை நிரப்பி அதற்குரிய ஆவணங்களோடு குழுவின் செயலரை அணுக வேண்டும். (விலாசம்:- Supreme Court Middle Income Group Legal Aid Society, 109- Lawyers Chambers, Post Office Wing, Supreme Court Compound, New Delhi-110001)

•    மனுதாரரின் மனுவை வாங்கியப் பின் சட்ட உதவிக்குழுவானது (legal aid society) அம்மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் கொடுத்து, அவ்வழக்கு மேற்கொண்டு ஆவன செய்வதற்கு ஏதுவானதா என்பதை ஆய்ந்தறிந்த பின்னரே, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

•    மனுதாரர் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம் என்று கற்றறிந்த, பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்று கூறினால், மட்டுமே இத்திட்டத்தின் பயன்களை மனுதாரர் அனுபவிக்க முடியும். அவ்வாறு மனுதாரரின் விண்ணப்பத்தில்/ வழக்குத் தாள்களில் பதிவு செய்த வழக்கறிஞர் மேலொப்பமிட்ட பின், (endorsement) உச்சநீதிமன்ற நடுத்தர வருமான சட்ட உதவிக்குழு, (Supreme Court Middle Income Group Legal Aid Society) மனுதாரரின் மனுவினை மனுதாரரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சேவை வரியாக ரூ.350/- மட்டுமே வசூலிக்கும்.

சட்ட உதவிக்கான கட்டணம் (Fee for legal aid)
=========================================
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கிற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணத்தை செயலர் சுட்டிக்காட்ட, அத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும்.
அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே செயலர், வழக்கினை, நடுத்தர வருமானக்குழுவின் சட்ட உதவித்திட்டத்தின் (MIG Legal Aid Scheme) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் / வாதாடும் ஆலோசகர் / குழுவின் மூத்த ஆலோசகரிடம் வழக்கின் தன்மை குறித்து கேட்பார்.

•    ஏற்படக்கூடிய செலவுகளின் அடிப்படையில் செயலரால் கூறப்படும் தொகையை, விண்ணப்பதாரர் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டும்.

•    விண்ணப்பங்களை அச்சிடுதல் மற்றும் இதர அலுவலகச் செலவுகளை இத்திட்டத்தின் ஆரம்பத்தொகை ஏற்றுக்கொள்ளும்.
பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்/வழக்கறிஞரின் கட்டணம் குறித்த செய்திகள்.(Schedule of fee for advocate on record /advocates)

மனுதாரரின் சார்பாகத் தோன்றுதல் (Appearing On Behalf Of Petitioner)
========================================
வ.எண் (S. No)

சேவைகள் (Services)

கட்டணம் (Fees)

  •  சிறப்பு விடுமுறை மனு/நீதிப்பேராணை/மாறுதல் வேண்டும் மனு, தேதிகள் குறித்த மனுக்கள், வழக்கைத் தள்ளிப்போடுதல், ஜாமீன், குற்ற மன்னிப்புத் தாமத  நோட்டீஸ் கொடுப்பதற்கு முன் மனுதாரரின் கோரிக்கையை கேட்பதற்காக செய்யப்படும் மனு போன்றனவற்றிற்காக எழுதப்படும் மனுக்களுக்கான கட்டணம் Rs 2200/ 
  • மறுப்பு உறுதிமொழி ஆவணம் (rejoinder affidavit) மற்றும் / அல்லது நீதிமன்ற ஆணைக்குப் பின் ஏற்படக்கூடிய இறுதிவரையிலான, ஒத்திவைப்பு பதிலாகச் செயல்படுதல் (நீதிமன்ற ஆணை விலக்கப்படும் இறுதி நிலை தவிர்த்து) போன்றன குறித்த மனுக்கள் எழுதுவதற்கான கட்டணம் Rs 1100/-
  • இறுதி நிலையில் வழக்கு குறித்த விசாரணை - (ஒரு நாளுக்கு ரூ.1650/- முதல் அதிகபட்சமாக ரூ.3,300/- வரை) ஒத்திவைத்தல் (adjournment, if any, and / மேல்முறையீட்டு நிலை அதிகபட்சம்  Rs.3300/-

மனுதாரரின் சார்பாகத் தோன்றுதல் (Appearing On Behalf Of Petitioner)
============================================================
  • இறுதிகட்ட விசாரணை தவிர்த்து பதில் அல்லது மறுப்பு உறுதிமொழி ஆவணம் (counter affidavit) மறுப்பு தெரிவிக்கும் மனு மற்றும் ஒத்திவைத்தலை (stay) விலக்குதல் அனுமதிக்கப்படும் வரை அனைத்து கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளுதல் போன்ற அனைத்து வகை மனுக்களும் எழுதுவதற்கு.     Rs 2200/-
  • மேல் முறையீடு அல்லது ஒத்தி வைத்தலுக்கு இறுதிகட்ட நிலையில் மற்றும்/அல்லது ஆரம்பநிலையில் ஒருநாளைக்கு ரூ.1650 என்ற நிலையில் விசாரணை மேற்கொள்ள அதிகபட்சம்  Rs.3300/-

மூத்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம் (Fee For Senior Advocates)

  • சிறப்பு விடுப்பு மனு, (settlement of SLP), பேராணை மனு (Writ Petition), மாற்றம் வேண்டும் மனு (Transfer petition), பதில் பிரமாணம் (Counter affidavit), மறுப்பு உறுதிமொழி ஆவணம் (Rejoinder Affidavit) கலந்தாலோசனை உள்ளிட்ட மறுப்பு அறிக்கை முதலியன குறித்த மனு எழுதுதல் Rs.1000/-
  • வழக்கின் ஆரம்ப நிலையில் தோன்றுதல் / விசாரணைக்குப் பின் தோன்றுதல், ஒவ்வொரு முறை தோன்றுவதற்கும் ரூ.1,650/- கட்டணம் பெறுதல் அதிகபட்சம் Rs.3300/-
  • இறுதி நிலையில் தோன்றுதற்கான கட்டணம்/மேல் முறையீட்டுநிலை ஒவ்வொரு முறை தோன்றுதற்கும் ரூ.2,500/- பெறுதல் அதிகபட்சம் Rs 5000/-

 கைச்செலவு கட்டணப்பட்டியல் குறித்த அட்டவணை  (Schedule of Rates for out of pocket expenses)

வ.எண் (S. No)

சேவைகள் (Services)

கட்டணம் (Charges) 
  • கணினி தட்டச்சு ஒருபக்கத்திற்கு ரூ.10.00
  •  நகலெடுத்தல் - ஒவ்வொரு அதிகப்படியான படிவத்திற்கும்
  • ஒருபக்கத்திற்கு 50 பைசா
  • தட்டெழுத்தர் கட்டணம் (Steno charges)
  • ஒருபக்கத்திற்கு ரூ.8.00
  • புத்தகக்கட்டுமானம் (Paper Book Binding)
  • ஒவ்வொன்றிகும் ரூ.5.00

 வழக்குத் தொடுப்பவர்களிடமிருந்துத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents required from the litigants)

மனுதாரர்கள் தங்கள் மனுவை நடுத்தர வருமான குழுவினுக்கு (MIG Society) சமர்ப்பிக்கும்போது முழுமையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவர் அல்லது ஒரு பெண்மனி உயர்நீதி மன்றத்தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க விரும்பினால், அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல், அவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த மனுவின் நகல், கீழ் கோர்ட்டில் தரப்பட்ட தீர்ப்பின்/ஆணையின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் தனது மனுவுடன் சமர்ப்பிக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலமில்லாத வேறு ஒரு மொழியில் இருக்குமானால் அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
•    செயலரால் கணிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்ட கட்டணமும் இதர செலவுகளுக்கான பணமும்,
•    இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு (Supreme Court Middle Income Group Legal Aid Society)

பிக்சட் டெபாசிட் மீது கடன் வாங்குவது எப்படி?

                                                                     கடன்

வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் போது நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. அதனை நாம் குறுகிய காலத்தில் திரும்பி செலுத்தவும் முடியும். இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும். அவ்வாறு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது வங்கிகள், உங்களுடைய வைப்புத் தொகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இதற்கு பதிலாக நீங்கள் தனி நபர் கடன் பெறலாம். நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தனி நபர் கடனை விட வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே சிறந்தது. அவ்வாறு கடன் பெற, நீங்கள் ஒரு வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும்.

                                                            வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். எனினும், அது வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, உங்களுடைய வைப்புத் தொகைக்கு நீங்கள் சுமார் 9 சதவீத வட்டி பெறுகிறீர்கள் எனில், உங்களுடைய கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். எனவே, நீங்கள் அதிகமாக சுமார் 2 முதல் 3 சதவீத வட்டியை செலுத்துகிறீர்கள்.

                                                                    கால அளவு

கடனுக்கான கால அளவு, உங்களுடைய வைப்புத் தொகையின் முதிர்வை பொறுத்தது. உங்களுடைய வைப்புத் தொகை முதிர்வடையும் வரை நீங்கள் உங்களுடைய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை எனில் உங்களுடைய கடன் தொகை வைப்புத் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

                                                                    கட்டணங்கள்

இத்தைகைய கடன்களில், எந்தவித ஆபத்தும் இல்லை. எனவே, வங்கிகள் பொதுவாக பிராசஸிங் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும், ஒரு சில வங்கிகள் ஒரு சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

தனி நபர் கடனை விட இது எந்த வகையில் சிறந்தது?

பொதுவாக வங்கிகள், கடன் அளவை பொறுத்து தனி நபர் கடனுக்கு 16 முதல் 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மேலும், தனி நபர் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். ஆனால் வைப்புத் தொகை மீதான கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் மட்டுமே. எனவே, குறுகிய கால அவசரத் தேவைக்கு வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே மிகவும் சிறந்தது.

தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது

வாதிகள் விளம்புகை மற்றும் செயலுறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி திருப்பூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் இடைக்காலமாக ஒரு மனுவை தாக்கல் செய்து, சொத்தை நில அளவையர் உதவியுடன் அளக்க ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அந்த மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதிவாதிகளின் வழக்கறிஞர் ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்தார். அதனால் நீதிமன்றம் வாதிகள் கோரியபடி வழக்கு சொத்துக்களை நில அளவையருடன் ஆய்வு செய்து, அளந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து பிரதிவாதிகள் இந்த சீராய்வு மனுவை செ‌ன்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்தனர்.

பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஆட்சேபனை இல்லை என்று மேற்குறிப்பு செய்து கொடுக்குமாறு பிரதிவாதிகள் அவர்களது வழக்கறிஞருக்கு எந்த அறிவுறுத்தலையும் கொடுக்கவில்லை, ஆனால் வழக்கறிஞர் பிரதிவாதிகளை கேட்காமல் அப்படி ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்துள்ளார் என்பதை முக்கிய காரணமாக கூறினார்.

வாதிகள் / எதிர்மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஒரு வழக்கறிஞரின் நேர்மை குறித்து வினா எழுப்பி மிகவும், தரக்குறைவான காரணத்தை பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர்கள் முன் வைத்துள்ளதாகவும், தங்களுடைய வழக்கறிஞரின் முதுகில் குத்துகிற ஒரு செயலில் பிரதிவாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வழக்கறிஞருக்கு தொழில் ரீதியாக உள்ள கடமை குறித்து வினா எழுப்பியுள்ளதாகவும் கூறி பிரதிவாதிகளின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கூறினார்.

இருதர‌ப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரு. P. தேவதாஸ் அவர்கள்

உரிமையியல் வழக்குகளில் ஒரு வக்காலத்தை அளிப்பதன் மூலம் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். வக்காலத்தை ஒரு வழக்கறிஞருக்கு அளிப்பது என்பது அவருக்கு அதிகாரத்தை வழங்குவது போன்ற ஒரு செயலாகும். கட்சிக்காரர் முதல்வராகவும், வழக்கறிஞர் அவருடைய முகவராகவும் செயல்படுகிறார். அவர்களுக்கிடையே முதல்வர், முகவர் என்ற நெறிமுறை உருவாகிறது. முகவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு ஒரு முகவர் செயல்படக்கூடாது என்பது முகவருக்கான அடிப்படை நெறிமுறையாகும். ஆனால் அந்த நெறிமுறை வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது. வழக்கறிஞர்களுக்கென்று சில சிறப்பு இயல்புகளும், சிறப்பு தகுதிகளும் உள்ளது. ( பார்க்க :- இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளைகள் 22(1),39-A மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 303, 304) அந்த சிறப்பு தகுதியானது வழக்கறிஞர்களின் தனித்தன்மை மற்றும் அச்சமில்லாமல் செயல்படுவதை பாதுகாப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கை நடத்துவதும் அதற்கான எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதும் ஒரு வழக்கறிஞரின் அடிப்படை கடமையாகும். அவருக்குள்ள தொழில் ரீதியான கடமை அல்லது ஆளுமையை அவருடைய கட்சிக்காரர் உட்பட எந்தவொரு நபருக்காகவும் அவற்றை அடகு வைத்துவிட முடியாது. ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில் ரீதியிலான கடமையை மேற்கொள்ளும் போது அதுகுறித்து கட்சிக்காரர், எதிரி, அரசு தரப்பு, நிர்வாகம் அல்லது சட்டம் இயற்றுபவர்கள் என யாராலும் கருத்து தெரிவிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ முடியாது. ஒரு வழக்கறிஞர் தொழில் ரீதியான கடமையை மேற்கொள்ளும் போது அவரை யாரும் தடுக்க முடியாது.

ஒரு வழக்கை நடத்துவது என்பது அந்த வழக்கறிஞரின் தொழில் சார்ந்த திறமையை பொறுத்தது. ஒரு குற்றவியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் அவருடைய கட்சிக்காரர் சிறையில் இருக்க வேண்டியது வரும். அதேபோல் ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் கட்சிக்காரரின் மதிப்பு வாய்ந்த சொத்து, பணம், கவுரவம் ஆகியவற்றை இழக்க நேரிடுவதோடு தெருவில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் வழக்கறிஞரின் மீது சுமத்தப்படும்.

ஒரு வழக்கு சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில்முறைக் கடமையை ஆற்றும் விதமாக முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அவர் ஒரு விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கிற நிலைப்பாட்டினை எடுக்கலாம். சில நேரங்களில் அந்த வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் மறு தரப்பினர் செயல்படுவதை தவிர்க்கும் விதமாக ஒரு விண்ணப்பத்தை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிற மேற்குறிப்பை செய்யலாம். வழக்கறிஞர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருடைய கட்சிக்காரரின் நலத்தை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். எனவே அத்தகைய ஒரு முடிவை எடுத்ததற்காக வழக்கறிஞரை குறை சொல்லக்கூடாது.

ஒரு வழக்கறிஞருக்கு கட்சிக்காரர் ஊதியம் அளிக்கிறார் என்பதற்காக அவரை எஜமானராக கருத முடியாது. ஒரு வழக்கறிஞர் யாருக்கும் ஊழியராக செயல்படக்கூடியவர் அல்ல. அவருடைய மனசாட்சி, சட்டம் மற்றும் கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கும் கீழ்படிந்து நடக்கக்கூடிய நபராவார். அவர் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞரும் அவருக்கு எஜமானராக இருக்க முடியாது. அவர் ஒரு குருவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு வக்காலத்தை படித்து பார்த்தால் ஒரு வழக்கறிஞருக்கு அந்த வக்காலத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். ஒரு வழக்கை நடத்துகிற போது அவருடைய தொழில் சார்ந்த கடமையின் அடிப்படையில் அவர் உடனுக்குடன் சில முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தின் அலுவலராக கருதப்படுகிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியாகும். நீதி நிர்வாகத்தின் தனித்தன்மையை காப்பாற்றுவதில் வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு வழக்கறிஞர் யாரையும் சாரந்திருக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருக்க வேண்டும்.

தொழில்முறைக் கடமையை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் அவருடைய தொழிலில் தவறாக நடந்து கொள்வது, ஏமாற்றுவது, உடந்தையாக இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது.

எனவே ஒரு வழக்கறிஞர் தனது தொழில்முறைக் கடமையை செய்யும் பொழுது ஒரு மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினால் அது தவறு கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO. - 3630/2013, DT - 4.4.2017

D. Jeganathan and S. Gopinath Vs V. Duraisamy and V. Somu

2017-2-MWN-CIVIL-279
2017-3-MLJ-837"

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்கும்போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கூறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?

     உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு எந்தவிதமான அறிவிப்பும் அனுப்பாமல் உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க விரும்பினால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் "சிவகுமார் சதா Vs டெல்லி மாநகராட்சி (1999-3-SCC-161" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

        மேலும் "Dr. V. தேவசகாயம் Vs சத்தியதாஸ் (2002-2-LW-672)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்பாமல் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்கும் பொழுது அதற்கான காரணத்தை அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு காரணங்களை குறிப்பிடாமல் அளிக்கப்பட்ட உத்தரவு ஒரு நிமிடம் கூட நடைமுறையில் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

       மேலும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை வலியுறுத்தி "1994-4-SCC-225" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.

   உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த முறையில் தான் அந்த விஷயம் நடைபெற வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் அந்த விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு ஒரு உத்தரவை வழங்கினால் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

   எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், விரிவான காரணங்களை கூறாமல் வாதிக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 2073/2012

M/s சண்முகம் பவுண்டேஷன் Vs சிவகாமி மற்றும் பலர்

2012-4-LW-CIVIL-670

மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

இந்த வழக்கில் கண்ட எதிர்மனுதாரான ராதாபாய் என்பவர் முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் டாக்டர். மற்றொருவர் இன்ஜினியர். இவர்களின் தந்தை இறந்து போனார். இறக்கும் போது சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகிப் போனார். எனவே தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. ச பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஐ, அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.

மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Criminal Appeal No - 1486/2001

Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others

2013-1-DMC-509

சுதந்திர உரிமை (சரத்து 19 - 22) - இது 6 வகையான சுதந்திரங்களை அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது அதன்படி...

1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ய) இந்த சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும். பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்.

2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (சரத்து -19 (1) (b) இது அரசின் பாதுகாப்பு , அண்டை நாட்டுடன் நட்புறவு பொது அமைதி ஒழுக்கம்,நீதிமன்ற அவமதிப்பு அவதூறு குற்றம் செய்யதூண்டுதல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற நலன்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம் ( சரத்து -19 (1 ) (உ) இது பொது அமைதி அல்லது அறநெறியின் நலனுக்குட்பட்டும் ,இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும் கட்டுப்பாடு விதிக்கலாம்.

4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம் (சரத்து -19 (1) (ன) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ந) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 6. தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம் ( சரத்த -19 (1) (ப) இதன் மீது நியாயமான தடையாகவும், பொதுமக்களின் நலனிற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள்(சரத்து -20) · இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 -ன் படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. · குற்றஞ்சாட்டப்பட்ட செயல் ,செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட கூடாது.(னுடிரடெந துநடியீயசனல) · குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது.(சுபைhவ யபயiளேவ ளநடக inஉசiஅiயேவiடிn) யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21)

· தனி மனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும். · ஒரு நபரின் வாழ்க்கையும்,தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது. · ஹ.மு. கோபாலன் ஏ சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21 ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. · மேனகா காந்தி ஏ இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுள் இயற்கை நிதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. · வாழும் உரிமை,தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது. பிழைப்புத் தொழில் , சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும். · தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும். · வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்காது.

கல்வி உரிமை (சரத்து 21 -அ)

2002 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. · 2009 இல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து2 2

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22 -ன் படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது. · மேலும் மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது , பாதுகாப்பு அளிப்பதோடல்லமால் கைது செய்வதற்கான காரணத்தைக் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. · சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும் ,கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர் படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. · ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், மேலும் வழக்கரைஞரை அமர்த்துவதற்கும் உரிமை உண்டு. · தடுப்புக் காவல் சட்டத்தின் படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14 ,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக் கூடாது. · தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978 ம் ஆண்டின் 44 வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது

Notary Public (நோட்டரி பப்ளிக்)

இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 13, 2018

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988

இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

வரையறை

இச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை:

பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது.பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.

இதன்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்கள் தேவை:

அதில் சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்க்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத் தகாத சலுகை அளித்தல்.ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.

தண்டனை

லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஊழல் ஆணையம்

ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசுமத்திய விழிப்புணர்வு ஆணையத்தைஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல்பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்

ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

                        இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 

                            மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

                                ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

                            டிரைவிங் லைசென்ஸ்!  யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

                            பான் கார்டு! யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

                            பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

                                கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

                                  டெபிட் கார்டு! யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

                                    மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 

                                   பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?  ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

                                      கிரெடிட் கார்டு!யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  

ஒருவரை கொலை செய்வதாக வெறும் வார்த்தைகளால் மிரட்டினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) & 506(2) ன் கீழ் வழக்கு தொடர முடியுமா?

***********************************************************************
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) ன் கீழான குற்றத்தை பொறுத்து மதுரை உயர்நீதிமன்றம் " சீனிவாசன் Vs சார்பு ஆய்வாளர் (2009-4-MLJ-CRL-1118)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பத்தி 11 ல் பின்வருமாறு கூறியுள்ளது.

ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தும். ஒருவருக்கு அபாயம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெறுமனே வெறும் வார்த்தைகளை பயன்படுத்துவது போதுமானதல்ல. ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு, புகழுக்கு அல்லது சொத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டினால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச் செயல் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " இராஜன் Vs காவல்துறை ஆய்வாளர் (2008-2-MWN-CRL-258)" என்ற வழக்கில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பத்தி 10 - ல்

" இதே போன்ற சங்கதிகள் கொண்ட " உஷாபாலா Vs பஞ்சாப் மாநில அரசு (2002-2-CCC-320-P&H)" என்ற வழக்கில், பஞ்சாப் உயர்நீதிமன்றம் இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

வெறுமனே மிரட்டுவதால் இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இந்த மனுதாரருக்கு எதிராக உள்ளதாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு எதிராக எந்த வழக்கும் உருவாகவில்லை.

எனவே 15.7.1999 ஆம் தேதி இ. த. ச பிரிவுகள் 406 மற்றும் 498(A) ன் கீழ் பாட்டியாலா, சாதர் காவல் நிலையத்தில் குற்ற எண் 313 என்கிற எண்ணில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நிகழ்நிலை புகார்தாரரை மிரட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது  அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையினரின் பாதுகாப்பு அவரால் கோரப்படவில்லை. எனவே இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்றச்சாட்டும் நிலைக்கதக்கதல்ல என்கிற முடிவிற்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " கிருஷ்யா டைல்ஸ் & போர்டடரிஸ் (மெட்ராஸ் பி. லிட்) Vs காவல்துறை ஆய்வாளர் (2006-2-CTC-642)" என்ற வழக்கில், 1 முதல் 3 வரையான எதிரிகள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்கிற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக கூறப்படும் அந்த கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதேபோன்றதொரு தீர்ப்பு " D. சுப்பிரமணியன் சுவாமி Vs C. புஷ்பராஜ் (1998-1-CTC-300)" என்ற வழக்கிலும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒருவரை கொலை செய்து விடுவதாக வெறும் வார்த்தைகளால் மட்டும் திட்டியதற்காக அவர் மீது இ. த. ச பிரிவுகள் 506(i) மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 18665/2014, DT - 21.4.2015

S. Selvakumar Vs Inspector of police, AWPS, Keelakkarai, Ramanathapuram District

2015-2-MWN-CRL-195

Friday, February 9, 2018

பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழையா?

பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள்.வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும். பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.

எனவே பத்திரப்பதிவுக்காக ஆவணங்களைத் தயார் செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் எண்ணெண்யை விட்டுப் படிக்க வேண்டும். சிறியதாக ஒரு தவறும் இல்லையென்றால் மட்டுமே சரியான ஆவணமாக இருக்கும். ஒரு வேளை பதிவு செய்த பிறகு ஆவணங்களில் தவறு இருந்தால் என்ன செய்வது? அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும்.

பிழை திருத்தும் ஆவணம் மூலமே பிழைகளைச் சரி செய்ய முடியும். அப்படிப் பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், விலாசம் போன்றவற்றில் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்.

சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்த ரூ. 300 வரை செலவாகக்கூடும்.

எல்லாம் சரி, மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டால் பிழையைத் திருத்த முடியுமா? இந்தப் பிழை சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்தால் அலைய நேரிடும். இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்.

அந்தப் பிழையைத் திருத்தும்பட்சத்தில் வித்தியாசத் தொகைக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த சொல்லக்கூடும். கூடுதல் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.   

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்

1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார் 

Tuesday, January 30, 2018

IMPORTANT COURT CITATION NOTES

Appeal - Right of victim - Limitation - Victim has to file appeal within a reasonable time after date of knowledge of judgment impugned in appeal. (2015(3) Criminal Court Cases 586 (Kerala)

Cancellation of bail - Bail cannot be cancelled merely on the ground that there is threat to petitioner, as he is at liberty to move representation to authorities concerned. (2016(3) Criminal Court Cases 736 (P&H)

Criminal trespass - Complainant not able to show prima facie possession on the property - Civil dispute given color of criminal case - Complaint dismissed by holding that prima face case not made out even for conducting examination u/s 200 Cr.P.C. - Order of dismissal calls for no interference. (2017(1) Criminal Court Cases 129 (Delhi)

Custody of child - Hindrance by mother to visitation rights of husband - Father can take  police help - Even if some coercive step is required to be taken against the mother, he shall be free to take that in accordance with law, treating her action to be contempt of Court. (2017(4) Civil Court Cases 569 (Jharkhand)

Discharge - From one of two offences -  Court can convict for such offence for which he was discharged. (2017(1) Criminal Court Cases 149 (Rajasthan)

Dishonour of cheque - Complainant not sure about the date of advancing loan and as  who wrote the cheque and also not even aware when exactly and where exactly the transaction took place - These are serious lacunas which strike at the root of the complaint - Accused acquitted. (2014(1) Civil Court Cases 001 (S.C.)

Domestic Violence - Shared household - Means - House belonging to or taken on rent by husband or house which belongs to joint family of which husband is a member. (2015(3) Criminal Court Cases 637 (P&H)

Maintainability of suit - It is for plaintiff to first establish his right and then seek remedy - Plaintiff has to stand on his own legs and cannot take advantage of the weakness of the defendant's case. (2016(1) Civil Court Cases 047 (H.P.)

Maintenance pendente lite - Capacity of other party to earn cannot be taken into consideration, while granting maintenance pendente lite - It is only actual earning of opposite party on the basis of which relief can be granted - Permanent income and not casual income is relevant. (2017(1) Civil Court Cases 273 (Delhi)*

Offence u/ss 498-A, 406 IPC - Only incidents of unhappiness - Allegations in complaint and charge sheet does not satisfy ingredients of alleged offences - Proceedings quashed. (2017(4) Criminal Court Cases 514 (S.C.)

Partition - Execution sought after 30 years of passing of preliminary decree - Till partition is carried out and final decree is passed, there is no question of any limitation running against right to claim partition as per preliminary decree. (2017(4) Civil Court Cases 411 (S.C.)

Proof of a document - Neither mere admission of a document in evidence amounts to its proof nor mere marking of an exhibit of a document dispense with its proof, which is otherwise required to be done in accordance with law. (2016(1) Civil Court Cases 001 (S.C.)

Rent and eviction - Bona fide requirement - Comparative advantage and disadvantage - Law leans in favour of the person to whom the greater inconvenience and hardship is caused and would grant relief to landlord only when his hardships are likely to exceed the hardships which may be caused to the tenant. (2017(2) Apex Court Judgments 183 (S.C.)

Suit for possession - Suit for possession based on title - It is not necessary for plaintiff to prove his dispossession for seeking relief of possession. (2017(4) Civil Court Cases 558 (H.P.)

Voice sample - Text to contain words drawn from the disputed conversation but not the sentences from the disputed conversation. (2016(3) Criminal Court Cases 714 (S.C.) *Agreement to sell - Affidavit of presence attested by Notary/Oath Commissioner and not by Sub Registrar - Proves presence in office of Sub Registrar. (2013(1) Civil Court Cases 041 (P&H)*

Amendment of plaint - Challenge to sale deed of the year 2005 in 2015 - Suit filed in the year 2010 - No averment in application as to what prevented plaintiff to challenge the sale deed earlier - Amendment sought is barred by limitation. (2017(4) Civil Court Cases 847 (M.P.)

Co-sharer - When one co-sharer is in possession of the land, the other co-sharers must be considered to be in constructive possession of the land. (2014(1) Civil Court Cases 329 (Allahabad)

Dishonour of cheque - Accused not residing within jurisdiction of Court - Issuance of process without compliance of provision of S.202 Cr.P.C. - Order issuing process quashed. (2014(1) Criminal Court Cases 225 (Gujarat)

Dishonour of cheque - Pre-mature complaint - Proceedings liable to be quashed - Conviction set aside. (2017(4) Civil Court Cases 796 (H.P.)

Domestic violence - Committed before commencement of Act which continued even after passing of the Act - Wife is entitled for protection orders and residence orders u/ss 18 & 19 of the Act along with maintenance allowance. (2014(1) Criminal Court Cases 160 (S.C.)

Execution - Injunction in a representative suit - Wilful disobedience by a person not party to the suit - Decree is executable if such a person is for whose benefit the suit was defended. (2013(1) Civil Court Cases 242 (Kerala)

Jurisdiction - Return of complaint - S.201 Cr.P.C. can be applied immediately on receipt of complaint. (2014(1) Criminal Court Cases 217 (S.C.)

Money deposited by a customer with Bank - Period of limitation starts from the date when a demand is made. (2017(4) Civil Court Cases 681 (P&H)

Notice u/s 80 CPC  - Issued after suit became time barred - Limitation period would not be extended for further two months as this provision would be irrelevant. (2016(1) Civil Court Cases 082 (S.C.)

Recall of a witness - Wrong statement made against own record - Court to recall said witness. (2014(1) Criminal Court Cases 112 (S.C.)

Recall of summoning order - Magistrate has no power to review its own order. (2014(1) Criminal Court Cases 217 (S.C.)

SLP - Filed against a dead person - Provision of impleading L.R's applies only when a party dies during the pendency of petition and not when a petition is filed against a dead person - However, Court can allow amendment of petition. (2013(1) Civil Court Cases 164 (S.C.)

Specific performance - Decree of specific performance for part of a contract cannot be passed where plaintiff himself files suit for part of contract. (2017(4) Civil Court Cases 693 (P&H)

Temporary injunction - One of the foremost considerations is conduct of the parties. (2014(1) Civil Court Cases 023 (Patna)

Auction sale - Setting aside - Applicant has to satisfy Court that he has suffered substantial injuries by such lacunae in the procedure. (2018(1) Civil Court Cases 255 (Rajasthan)

Banking fraud - Criminal proceedings not to be quashed even if accused voluntarily settles monetary claim. (2014(1) Apex Court Judgments 078 (S.C.)

Dishonour of cheque - Execution - Proof - By suggestion in cross examination - Not sufficient proof. (2018(1) Civil Court Cases 234 (Kerala)

Dishonour of cheque - Prop. firm - Entire business taken over by Pvt. Ltd. Co. - Substitution of complainant can be allowed. (2016(1) Civil Court Cases 251 (Guj.)

Execution - Suit for recovery of possession of building given on rent - Destruction of building - Landlord is entitled to recover the land in which building existed. (2017(1) Civil Court Cases 281 (Kerala)

Inquest report and post-mortem report - Not basic or substantive evidence - Any discrepancy occurring therein cannot be termed as fatal or suspicious circumstance which would warrant benefit of doubt to accused. (2014(1) Criminal Court Cases 518 (S.C.)

Joint Family - There is legal presumption that every Hindu family is joint in food, worship and estate and in the absence of any proof of division, such legal presumption continues to operate in the family. (2018(1) Civil Court Cases 167 (S.C.)

Malicious prosecution - Limitation of one year to file suit to be computed by excluding date of delivery of judgment and not time taken by Court to supply certified copy of judgment. (2016(1) Civil Court Cases 295 (P&H)

Partnership - Death of one of partners - Clause in deed to continue partnership on death of a partner and manner of calculating the dues - Ss.42(c) & 37 of Partnership Act, have no application in view of said clause - Thus, consequential direction for dissolution of firm and settlement of accounts by High Court set aside. (2018(1) Apex Court Judgments 159 (S.C.)

Service - Regularization - Part time appointment on fixed tenure - Termination of service after expiry of fixed tenure, not arbitrary. (2016(3) Apex Court Judgments 116 (S.C.) 

Thursday, January 18, 2018

மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்குடிசை மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமறைகள்கேள்விகள்

                வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.

                    மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான  சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
                    
                    எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

                  உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

                            உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5 இன்படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக்கடிதம் தர மறுத்துவிட்டாலோ, சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர்தரவேண்டும். மேலும், படிவம்-6-இன் படி  காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக, உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து, மேலும் இயல்பான காப்பு வைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்கவேண்டும்.மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன்பாக, மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை வாரியத்தின் உரிய அலுவலரால் ஒப்பளிப்பு பெற வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பத்தினை, பதிவு கட்டணம் மற்றும் காப்பு வைப்புக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். உரிய காலக்கெடுவிற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான  வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்) தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, நுகர்வோர் பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின். உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்புக்கோரும் மின் நுகர்வோர், தன்னுடைய இடத்தில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த கட்டமைப்புகளுக்கு அரசு தலைமை மின் ஆய்வாளரின் சான்றிதழ் பெற வேண்டும்.நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உரிய காலத்திற்குள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

                 விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

விவசாய மின் இணைப்புகள் வழங்குவது தொடர்பான நடைமுறைகள்:- விவசாய மின் இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்கும் குறியீட்டிற்கு தகுந்தவாறு விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பதாரர் இணைக்கவேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமை சான்று. உரிமை சான்றில் கிணறு மற்றும் நிலம் மனுதாரருக்கு சொந்தமானது என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கவேண்டும்.கிராம நிர்வாக அலுவலர் இடம் இருந்து கிணறு அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் வரைபடத்தை இணைக்க வேண்டும்.சிட்டா அடங்கல்.பட்டா / பத்திரம்கிணறு அரசுக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு, ஆற்றுப்படுகையோரம் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அருகில் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெறப்படவேண்டும்.குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்படவேண்டும்.விண்ணப்பத்தில் கிணற்றின் உரிமையாளர் கையெழுத்திடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களாக இருந்தால் அனைவரும் கையெழுத்திடவேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நபரின் பெயரில் மின் இணைபபு பெற மற்ற நபர்கள் மறுப்பின்மை சான்றிதழ் வழங்கவேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாய விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்கப்படும்.

அ. விவசாய மின் இணைப்பு கீழ்க்கண்ட இனங்களுக்கு மதிப்பீட்டுத் தொகை எதுவும் பெறாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண வரிசை திட்டத்தில் மின் இணைப்பு பெற எல்லா பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

ஜீவன்தாரா திட்டத்தில் மின் இணைப்பு பெற, கிணறு ஜீவன்தாரா திட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது என்பதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மேற்கண்ட இனத்தைச் சாராதவர்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், பழங்குடியினர் மற்றும் கலப்பு திருமணம் செய்த நபர்களுக்கு ஒவ்வொருவருடமும் 150 எண்ணிக்கைகள் சிறப்பு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கடித எண்.18.6.2010ல் பணிபுரியும் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரும் சேர்க்கப்பட்டு மேற்கண்ட குறியீடு 250 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு பிரிவில் மின் இணைப்பு பெற வாரியத்தில் விண்ணப்பம் பதிவு செய்து ஒரு வருடம் கழித்து உரிய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களுடன் (முன்னாள் இராணுவத்தினர் தவிர்த்து) மேற்பார்வை பொறியாளர்/ஊரக மின்மயமாக்கல் மற்றும் மேம்பாடு (பகிர்மானம்)/தமிழ்நாடு மின்சார வாரியம், 144, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். முன்னாள் இராணுவத்தினர் தங்களது விண்ணப்பங்களை கூடுதல் இயக்குநர், முன்னாள் இராணுவத்தினர் நலப்பிரிவு, 22, இராஜா முத்தையா சாலை, சென்னை- 600 006 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யவும். மேற்கண்ட அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் சிறப்பு முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் தாட்கோ மகளிர் திட்டத்தில் தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டமான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு, சிறப்பு முன்னுரிமையில் இலவசமாக ஒருமுறை மட்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு துரிதமுறையில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

                 குடிசை மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.5/- செலுத்த வேண்டும். குடிசை மின் இணைப்பு, கிராம பஞ்சாயத்து மற்றும் சிறப்பு நிலை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம், தாட்கோ மற்றும் காமராஜர் ஆதிதிராவிட திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் குடிசை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குடிசை மின் இணைப்புகளுக்கு 40 வாட்ஸ் மின்பளு அளவிற்கு மட்டுமே வழங்கப்படும். குடிசை மின் இணைப்புக் கோரும் இடத்தின் பரப்பளவானது 250 சதுர அடிக்கு மிகாமலும், குடிசை, களிமண், ஓலைக் கூரை, ஓடு, சிமெண்ட் தகடு வேயப்பட்ட (ஆஸ்பெட்டாஸ்) மற்றும் தகர கூரைகளால் கட்டப்பட்ட ஒரு அறை உள்ள இடமாக இருக்கவேண்டும். படிவம் - 3 குடிசை மின்னிணைப்பு விண்ணப்பம் (விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க) (ஊராட்சி அமைப்புகளில் உள்ள குடிசைக்கு 40 வாட் தாழ் அழுத்த மின் ஆற்றல் வழங்குமாறு கோரும் படிவம்)

பெறுநர் உரிமதாரரின் பொறியாளர் .................................................. ... .....................................................

ஐயா,

எனது, கீழே விவரித்துள்ள குடிசைக்கு மின் ஆற்றல் வழங்கும்படி, இதனால் கேட்டுக் கொள்கிறேன்.நான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிக்கும் ஒழுங்குமுறைவிதிகளின் படியாக வேண்டப்படும், மின் ஆற்றல், மின்னிணைப்பு, மின்னளவு வாடகை மற்றும் பிற கட்டணங்களோடு காப்பு வைப்புத் தொகையும் செலுத்த இசைகிறேன்.நான் இதற்கானகட்டண வீதத்தைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையக் கட்டணவீத ஆணை தரும் அட்டவணையில் உள்ள கட்டணவீதப்படி கட்டணம் விதிக்கப்பெற விரும்புகிறேன்.40 வாட் அளவு மின்சாரம் மட்டுமே பெறவும் அதைக் கீழே விவரித்துள்ள எனது குடிசைக்குப் பயன்படுத்துவதற்கும் இசைவதோடு, 40 வாட் மின்திறனுக்கும் மேலாக நான் மின் ஆற்றலைப் பயன்படுத்தினால் உரிய அதிகாரிகளால் மின்னிணைப்பு துண்டிக்கப்படவும் இசைகிறேன்.நான் குடிசையை விற்கவோ, வேறுவகையில் விட்டுவிலகவோ நேர்ந்தால், கால அட்டவணைப்படியான ஒரு மாதக் கால அறிவிப்பை எழுத்து மூலம் தெரிவிப்பதோடு உரிமதாரருக்குச் செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளைச் செலுத்தவும் இசைகிறேன்.உரிய அதிகார அமைப்பு விதிக்கும் பாதுகாப்பு விதிகளின்படியும் விதித்தொகுப்பு விதிக்கும் விதிவகுப்புகளின்படியும் எனது குடிசையில் ஒற்றைப்புள்ளி ஒளியூட்டுவதற்கான மின்கம்பியமைப்பை அமைக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன். உரிமதாரரே எனது குடிசைக்கு ஒளியூட்ட ஒற்றைப் புள்ளி மின் கம்பியமைப்பைச் செய்து தர வேண்டுகிறேன். அதற்கான செலவை நான் செலுத்தி விடுகிறேன்.தன் அறிவிப்பு மின்னிணைப்புக்கு விண்ணப்பம் தரும் குடிசை எனக்குச் சொந்தமானது என்பதோடு ய) அது எனது பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது (நிலவரிப் பற்றுச் சீட்டு இணைக்கப்படுகிறது) என்று b) இது தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் நிலவுரிமையாளரின் மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று உ) இது புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், இத்துடன் உரிய அலுவலரிடம் (துணை வட்டாட்சியர் பதவிக்குக் குறையாதவர்) பெற்ற மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று (தேவையற்ற விதித் தொடர்கள நீக்கிவிடலாம்) உறுதி கூறுகிறேன்.குடிசை உள்ள இடவிவரம் ய) விண்ணப்பதாரர் பெயர் b) தந்தை பெயர் உ) ஆதிதிராவிடர், பிறசாதியினர் ன) புல எண், குடிசை அடையாளம் ந) குடிசைப் பரப்பு க) குடிசை களிமண்ணால், ஓலைக் கூரையால் கட்டப்பட்டுள்ளது ப) கிராமமும், வட்டமும் h) வாடகையாளர் (பெயர்) i) விண்ணப்பத்தாரர் தொடர்பு முகவரி

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமறைகள்

தாழ்வழுத்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.

விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும், மின் இணைப்பு தேவைப்படும்இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்,

மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான  சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.

               விண்ணப்பம் பின்வரும் ஆவணங்களோடு தரப்பட வேண்டும் :

உரிமைச் சான்று (விண்ணப்பப் பத்திரம், தண்ணீர் அல்லது வடிகால் வரியின் பற்றுச் சீட்டு.விண்ணப்பதாரர் மின்னிணைப்பு கோரும் இடத்தின் உரிமை அல்லாதவராக இருப்பின் -  உரிமையாளரது சம்மதக் கடிதம் அல்லது இருப்பிட உரிமைச் சான்றிதழ் (அல்லது குத்தகைப் பத்திரம்) மற்றும் காப்புறுதி பத்திரமும் இருமடங்கு   காப்பு வைப்பு தொகை செலுத்த சம்மதக் கடிதம்.ஆர்வமுள்ள நுகர்வோரால் மின் வழங்கல் கோரப்படும் கட்டுமானம், மாற்றிமைத்தல் அல்லது கட்டிடங்கள் பழுதுபார்த்தல் அல்லது புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழிற்கூடங்கள் அல்லது பிற நிறுவனங்கள் நிறுவுதல் குறித்து தமிழ்நாடு மாநிலத்தின் சட்டங்களில் சொல்லப்பட்டவாறு உரிய அதிகார அமைப்புகளிடமிருந்து அனுமதி அல்லது ஒப்புதலளிப்பு அல்லது ஒப்பளிப்பு அல்லது இசைவு பெறுவதுதொடர்பாக அத்தகைய சட்டங்களுக்கு ஆர்வமுள்ள நுகர்வோர் இணங்கி நடத்தல்.உயர்நீதிமன்ற ஆணை 23-08-2006 ன் படி, சென்னை பெருநகர் பகுதியிலுள்ள சிறப்பு வகை மற்றும் பல மாடி கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கான படிவத்துடன் உரிய அதிகார அமைப்பிடமிருந்து பெறப்பட்ட திட்ட அனுமதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். மின் இணைப்பு பெறுவதற்கு முன்பு பணி முடிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது   தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்துக் கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்ட பிறகே மின் நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்)  தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின் உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கேள்விகள்

1. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?

தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

2. நான் மின் கட்டணத்தை முன் பணமாக கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

3. தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்?

தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும்,

4. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்?

முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


பட்டாவை மட்டும் வைத்து ஒருவர் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.

 பட்டா ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டதாலேயே அந்த சொத்து அவருக்கு உரிமையுடையதாகிவிடாது.

Patta and adagal will not confer title
(2002-4-LW-780)

It is trite proposition of law that patta would not constitute title
Srinivasan and six others Vs Sri Madhuyarjuneswarawami, pettavaithalai, Trichy District by its Executive officer and Others
(1998-1-CTC-630)

As it is well known that patta alone would not constitute title, but it can only be taken as piece of evidence in support of the other documentary or probable evidence adduced on the side of a party
(2009-2-LW-783)

Grant of patta was challenged in Writ petition - Held Entries in revenue records donot create or entinguish title no presumptive Value such entries are only for the purpose of payment of land revenue
(2005-2-LW-626)